Custom Search

வியாழன், 22 செப்டம்பர், 2011

சுவடுகள்..

கருவறையில் சிறைவைத்து
      கண்ணீரின் கதைவைத்து - நான்
வரும்வரையில் காத்திருந்து
      வளமூட்டி வளர்த்த சுவடுகள்....

நிதம் என்னைச் சீராட்டி
       நினைவுகளைப் பாராட்டி..
சிதம் தொய்யச் சித்திரமாய் -என்
       சிந்தனை செதுக்கிய சுவடுகள்...

மீண்டுமீண்டு தோற்ற நொடியெல்லாம்
      மீண்டும் மீண்டும் நினைவில் நிற்கும்
ஈன்றெடுத்த தாய்பதித்த
      ஈரமற்ற சோகச் சுவடுகள்..

கண்ணீரைக் கலசமாக்கி
      கதிதொலைந்து தோற்றுப்போய்
செந்நீரை எனக்களித்த தாயின்
       கண்ணீர் பதித்த சுவடுகள்...

நித்தம் சிறுகதைகள் கேட்டு
       நீலியி சாபம் கேட்டு
சித்தம் சுருங்கத் தொலைத்த
       சிறகொடிந்து சிதைந்த சுவடுகள்...

நாளுமெனை நினைவில் நிறுத்தி
      நாற்புறமும் காத்திருந்து - நான்
வாழும்வரை உடன்திளைத்த
      வற்றாத நேசச் சுவடுகள்....

நாவிற்குள் நுழைவதெல்லாம்
       நவின்றமிழின் ஊற்றொன்றே - என்
காவுக்குள் புகுந்ததெல்லாம்
       கவின்றமிழே உன்சுவடு....

கவிதை எழுதும் நேரத்திலும் - நான்
       கண்ணீர்விடும் நேரத்திலும்
கடவுளின் காரியமில்லை யெனஉயர்
       கவிஞன்  பதித்த சுவடுகள்...

விலங்கினக் கூட்டத்திலும் - நான்
       விளங்காது கிடந்தபோதும்
கலங்காத மதிகொடுத்த உயர்
       கவிதை புதைத்த சுவடுகள்...

கடவுளால் ஏதும் ஆவதில்லை
       காதல் சக்தியாலே ஆவதுண்டு
கடல்போன்ற கவிஞன்முகம் - என்
       கல்நெஞ்சைச் சிதைத்த சுவடுகள்...

இளமைக்கால மயக்கத்திலே - உன்
       இமைகள் கொடுத்த தயக்கத்திலே...
வளமின்றி வற்றிப்போன - என்
        வறண்ட மனச்சுவடுகள்...

காதல்வந்து மோதமோத - என்
       கண்ணுக்குள் ஆடிப்பாட
வேதம் வந்து சொல்லவில்லை - உன்
       வேல்விழி புதைத்த சுவடுகள்...

காத்திருக்கும் நேரத்திலே
        காதல் சொன்ன ஆழத்திலே
பூத்திருக்கும் உன்னெழிலில்
        புதைந்தமனச் சுவடுகள்...

மதிகழன்று மண்வீதியில்
        மனம்தொலைய நடைநடந்து
விதிமீதுதான் பழிபோட்டு
        வீண்போன வெற்றுச்சுவடுகள்....

சுரண்டல் செல்வங்களும்
        சுயநலப் பித்தர்களும் -இந்த
திரண்ட பூமியைச் சுரண்டிடக்கண்டு
        மிரண்ட மனதின்மிச்சச் சுவடுகள்...

கணந்தோறும் உன்நினைவில் நான்
       கதிதொலைந்த போதெல்லாம்
சினமேதுமின்றி நண்பர்கள் - என்
       சிதலத்தைச் சிறப்பித்த சுவடுகள்...

காற்றைக்கூட கலக்கிவிட்டு
      கனவுகளைத் தொலைத்துவிட்டு
ஊற்றெடுக்கும் உன்நினைவில்
      உள்ளம் புதைந்த உண்மைச்சுவடுகள்...

கார்கவிழ்த்த மழைவெள்ளம்
      கண்களில் நிறைந்துவர - என்
மார்புக்குள் புதைந்துவிட உன்
      முகம் புதைத்த சுவடுகள்...

சுவடுகள் பலவந்து
       சூட்சுமமாய் எனைத்தாக்க
திவலைகளாய் மனம்பூத்து
        திகட்டாமல் எனைச்சிதைக்க....

இத்தனை சுவடுகள் என்னை
       இடர்பாட்டில் விட்டபோதும் - உன்
பாதச்சுவடுகள் மட்டும் - மனம்
       பறிதவிக்க வைக்குதடி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக